Saturday, November 15, 2008

அருங்கலை

கலைகள் மனதிற்கு இன்பத்தையும் அமைதியையும் அளிப்பன. அறுபத்து நான்கு கலைகளுள் இன்று பல கலைகள் மனிதனுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்து வருகின்றது. இசை, பரதம், கவிதை, நாடகம், சித்திரம், தையல், சிற்பம் போன்ற கலைகள் மனித வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்து வந்தவை. இவற்றை எல்லாம் பொழுது போக்காகக் கொள்வோரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழும் கலைஞர்களும் உள்ளனர். மனிதனின் ஒலி இசையாகப் பரிணமித்தது போல் அவனது அங்க அசைவுகள் நடனமாக வெளிப்பட்டன. தென் இந்தியாவில்தான் பரத நாட்டியம் தோன்றியது. காலத்துக்கும் பிரபஞ்சத்தின் பரந்த வெளிக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்துவது நடனமாகும். அன்றும் இன்றும் இருபாலாரும் இணைந்து பரத நாட்டிய கலையைப் பயில்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிக காலந்தொட்டே இந்தியாவில் நடனமும் கூத்தும் ஒன்றென நிலவி வந்துள்ளது.

சங்கம் மருவிய காலத்தினைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் நடனம், மேடையமைப்பு ஆகியன விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதனையடுத்து சிற்பம், சித்திரம், கல்வெட்டுக்களும் அவ்வக் காலத்தில் நிலவி வந்த நடன முறைகள் பற்றி கூறுகின்றன. தஞ்சை பிரகதிஷ்வரர் ஆலயத்திலும் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் 108 கரணங்களின் அமைப்பைத் தெரிவிக்கும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நடனத்திற்கு புதிய பொலிவும் சமூக மரியாதையும் பெற்றுத் தந்தவர் ருக்மணி தேவி அம்மையார். இவர் சிறப்பான தேர்ச்சியும் பாண்டித்தியமும் பெற்றவர். நடனக் கலையை எம்மைப்போல் பலரும் விரும்பக் காரணம் மனதிற்கு இன்பத்தையும் அமைதியையும் தருவதால் தான். ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய கலைகளில் ஈடுபடுகின்றார்கள்.

தஞ்சாவூர் பொன்னையாபிள்ளை, தஞ்சாவூர் கிட்டப்பாபிள்ளை, வழுவூர் இராமையாபிள்ளை, அபிநய அரசி பாலசரஸ்வதி, ஸ்ரீமதி ருக்மணிதேவி அருண்டேல், அடையாறு கே. இலட்சுமணன் ஆகியோர் நாட்டியக் கலை மறுமலர்ச்சிக்கு தொண்டாற்றிய ஆசான்கள் ஆவார்கள். இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் பரத நாட்டியம் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தையும் நந்திகேசுவரின் அபிநய தர்ப்பத்தையும் தழுவியது. எனினும் அதன் அமைப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்த சகோதரர்களான சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேல் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். காலஞ்சென்ற திருவாங்கூரைச் சேர்ந்த லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் பரத நாட்டியம், மோகினியாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனங்களை ஆடினார்கள். அவர்கள் அசைவுகளில் இருந்து முழுமையான விளக்கத்தையும் திறமையையும் வெளிக் காட்டினார்கள். இந்நாட்டியம் அன்று மட்டுமல்ல இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலங்களில் ஆலயங்களில் ஆடப்பட்டு வந்த பரதம் இன்று பல தேசங்களிலும் பல அரங்கங்களிலும் வியாபித்து மிளிர்கிறது. வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற நடனம் கதக் மணிப்புரி ஆகும். கண்டிய நடனங்களில் அடங்கியுள்ள முக்கிய நடன வகைகள் வெஸ்நடனம், பந்தரு நடனம், நையாண்டி நடனம், உடுக்கி நடனங்கள் ஆகும்.

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டிற்கான இயற்கையன்னையின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங்கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுதவும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகியலை இறையின்பத்தோடு உய்த்துணர்ந்து அனுபவித்து இன்புறவும் பயன்பட்டு வருகின்றன. திராவிட இனத்துக்கும் கலைக்கும் உள்ள தொடர்பு அலாதியானதென மேற்குலகம் நிரூபித்து விட்டது. பரதக் கலையை ரசிக்கும் ஒருவன் உலகியலில் லயித்து உய்த்துணர்ந்து அதன் உச்ச நிலையில் இறை குணத்தை அடையக் கூடிய ஒரு புனிதத் தன்மையை அடைகிறான். இதை அளிக்க வல்லது பரதக் கலை மட்டுமே. இறைவனை நாயகனாகவும் அடியவளை நாயகியாகவும் கருதி ஆடப்படும் பரதம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருடார்த்தங்களையும் அளிக்கக் கூடியது.

இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கலை போற்றப்பட்டு பயிலப்பட்டு வருவது இக்கலையின் சிறப்பைக் காட்டுகிறது. தாண்டவமானது கால் வீச்சுக்கள், திருப்பங்கள், உயிர்ப்பூட்டும் காந்த சொரூப நிலைகள், கம்பீரமான தோற்றங்களையும் செயற்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நிருத்தக் கூறாகிய தாண்டவக் கூறு பகுதியாகவோ அன்றித் துண்டு துண்டாகவோ ஆடப்படும் நடனம் அன்று. தாண்டவக் கூறு நாட்டியத்தில் ஆடவருக்கே பொருத்தமானது எனக் கருதப்பட்ட போதிலும் கூட, இதை பெண்களும் ஆடலாம் என்பதனைச் சிதம்பர நடனச் சிற்பங்கள் பெண் சிற்பங்களாக இருப்பதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். லாஸ்யம் என்பது பெண்கள் ஆடக் கூடிய நளினமான ஆட்டம். அபிநயத்துக்கு முக்கியத்தவம் அளிப்பது. பரதத்தின் அதிபதியாக விளங்குபவன் நடராஜன். பாரத நாட்டின் நாட்டியக் கலையே பரத நாட்டியம். சிறப்பான பரத நாட்டியக் கலை தமிழகத்தில் நன்கு வளர்ச்சி பெற்று இன்றும் பொலிந்து விளங்குகின்றது. நமது நாட்டின் நடனக் கலை ஜீவாத்மா, பரமாத்மாவைக் கண்டு கலக்கச் செய்யும் ஒரு பக்தி யோகமாகும். நாட்டிய வேதத்தைப் பற்றிய ஐதீகக் கதையைக் கேளுங்கள். இந்திராதி தேவர்கள் ஒரு காலம் பிரதான நவரச பாவங்களுக்கான ஒரு கலையை சிருஷ்டிக்கும்படி பிரம்மாவை வேண்டிக் கொண்டார்களாம். இருக்கு வேதத்தில் இருந்து பொருளும், சாம வேதத்தில் இருந்து பண்ணும், யசுர் வேதத்தில் இருந்து அபிநய பாவங்களும், அதர்வ வேதத்தில் இருந்து நவரசமும் எடுத்துத் தொகுத்து நாட்டியக் கலையாக்கி பிரம்மா பரத முனிவருக்கு உபதேசித்து, "முனிவரே இக்கலையை நன்றாக மாணவர்களுக்குப் பயிற்றுவித்து உலகில் தெய்வ பக்தி பரவசத்தைப் பரப்பும்'' என்றார்

ஐந்தாம் வேதமாக நாட்டிய சாஸ்திரத்தை அறிந்து தம் நூறு பிள்ளைகளுக்கும் பல மாணவருக்கும் கற்பித்தாராம். ஆனால் சில அபிநயங்களைப் பெண்களே செய்ய முடியும் என அறிந்து அப்சரகந்தவர்களுக்கும் பயிற்றுவித்து பரமசிவன் முன்னிலையில் அரங்கேற்றினார். மயன் வகுத்த பெரிய ஆடல் அரங்கில் நாட்டியம் நடந்தது. முதலில் அசுரர்கள் இதனைத் தடுத்தனர். இந்திரன் அவர்களை வென்றோட்டினான். பரமசிவன் பூர்வாங்க பூசை செய்து நடனத்தைத் தொடங்கச் செய்தார். அவ்வாறே இன்றும் அரங்கு வழிபாடு நடந்த பின்னரே ஆடல் தொடங்குகிறது.

பரமசிவனே தண்டு முனிவரைக் கொண்டு தாண்டவமும் பார்வதியைக் கொண்டு லாஷ்யமும் பரத முனிவருக்குக் கற்பித்தாராம். பார்வதி பாணனுடைய மகள் உஷைக்கும் லாஷ்யத்தைக் கற்றுக் கொடுத்தார். உஷை துவாரகையில் உள்ள இடைச்சிகளுக்குச் சொல்ல அவர்கள் சௌராஷ்திரப் பெண்களுக்குப் போதித்தனர். இப்படியாகக் கலையானது சாஸ்திர தோத்திரமாக பூலோகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இருக்குவேதம் எழுதப்பட்ட ஆண்டு கி.மு. 4000 ஆகும். இந்நடனமானது ஐம்பது வருடத்துக்கு முன்புதான் புத்துயிர் பெற்றது.

செல்வி. சுபாங்கி ராஜகுலேந்திரா

No comments: